வீட்டு வாசலிலமர்ந்து
வீட்டுப் பாடம் எழுதுகையில்
வேலியோரத்து முருங்கையை
வேடிக்கைகாட்டி வீசியதென்றல்
விரல்களில்லாமலேயே என் தலைகோதிய
அக்காலம்:
ஒரு தலையணையில்
இரு தலைகள் வைத்து
ஒருக்கழித்துப் படுத்துக்கொண்டு
ஒவ்வொரு கதையாக பேசிச் சிரித்த
அக்காலம்:
ஓலைக் குடிசையில்
ஒன்றை விளக்கு வெளிச்சத்தில்
உலைகொதித்த அடுப்பு அணைந்திட
ஊதி ஊதி எரியவைத்து சமைத்துண்ட
அக்காலம்:
இருள் சூழ்ந்த இரவிலெல்லாம்
திறந்த கிடக்கும் கதவிடுக்கின் வழியே
காவலிருந்த நிலவை
கண்கொட்டாமல் ரசித்தபடி
கவலைகளற்று கண்ணயர்ந்து உறங்கிய
அக்காலம்:
திறந்த கிடக்கும் கதவிடுக்கின் வழியே
காவலிருந்த நிலவை
கண்கொட்டாமல் ரசித்தபடி
கவலைகளற்று கண்ணயர்ந்து உறங்கிய
அக்காலம்:
தெரியாத விளையாட்டையும்
தேடித்தேடிக் கண்டுபிடித்து
தேகம் வேர்க்க வேர்க்க
தெருவில் விளையாடிய
அக்காலம்:
மாலை கழுத்தில் விழுந்து
மண்டபம் முழுதும் விருந்து
மறுவீடு புகுந்த அந்நேரம்
மலமலவென கண்ணீர் கொட்டிய
அக்காலம்:
பட்டினியும் கிடந்து
பத்துமாதம் சுமந்து
பட்டபாடும் மறந்து
பச்சிளம் குழந்தையை
பாசம்பொங்க கண்டு தொட்ட
அக்காலம்:
அத்தனையும் மொத்தமாய் சேர்த்து
எண்ணங்களில் எழும் எண்ணிலடங்கா
மனதின் உணர்வுகளை
எழுத்தின் வடிவில் ஏட்டில் வடித்து
மனக்கண்கள் அதனை படித்து மகிழும்
அக்காலம் இக்காலம் எக்காலமும்
எனக்கு வசந்தகாலம்தான்..
வசந்தகாலம் தலைப்பிற்கு இம்மாத தமிழ்த்தேர் இதழில் வெளியான கவிதை.நன்றி தமிழ்த்தேர்.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.